Thursday, November 24, 2011

நினைத்தேன் , எழுதுகிறேன்

25 11 2011

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு – திருக்குறள்.

கணவனைப் பேணிக் காப்பதில் சிறப்புடையவளானால்,அவள் சுவர்க்கத்தில் பெறும் சிறப்பை இங்கேயே பெற்றுவிடுவாள் என்பதற்கேற்ப வாழ்ந்த என் கிரிஜாவே , நீ வாழ்ந்த போது, என்னை எல்லா விதத்திலும் மிக நன்றாக கவனித்துக்கொண்டாய். வீட்டுக்கவலை என்றால் என்ன என்று எனக்கு தெரியாதவாறு எல்லா பொறுப்புகளையும் செவ்வனே செய்து வந்தாய்.

நீ என்னை விட்டு பிரிந்த இந்த நாலு வருஷத்தில், வீட்டு பொறுப்புகளை நானே கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்த பின் தான் உன் அருமை எனக்கு தெரிய வந்தது என்பது இல்லை. ஆனால் நீ எவ்வளவு பெரிய சுமையை எவ்வளவு திறமையாக,எவ்வளவு அனாயாசமாக, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், 32 வருடங்கள் சுமந்து என் வாழ்க்கையை பிரகாசமாக ஆக்கினாய் !

கிரிஜா, நீ இல்லாமல் நான் வாடும் இந்த நிலையை ஆண்டவன் ஏன் எனக்கு கொடுத்தான் ? நம் குழந்தைகள் சுதா, சுபா, மாப்பிள்ளைகள் சந்தர்,மகேஷின் அன்பும்,ஆதரவும் நம் அருமை பேரன் பேத்திகள்,தனுஷ், சுகோஷ்,மஹதி,தர்ஷிணி இவர்களின் கொள்ளை பிரியமும்,மழலையும்,கொஞ்சலும் தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.

நீ இல்லாவிட்டாலும், நீ எப்போதும் என்னுடனேயே தான் இருக்கிறாய்.எப்போதும் இருப்பாய் .